ஒரு மாற்றத்துக்கு கன்னாபின்னாச் செய்திகளை கேள்வி பதில் வடிவில் வழங்குகிறேன்.
ஒவ்வொரு இந்திய குடிமகனு(ளு)க்கும் 30000 ரூபாய் கடனிருப்பதாக சமீபத்தில் படித்ததாக ஒரு நினைவு. அக்கடனை எப்படி தீர்க்கலாம்?
குவார்ட்டர் கோவிந்து, பேக்பைப்பர்புரம்
* இதற்கென்று தனியாக சேவை வரி(Service tax) தனியாக விதிக்கலாம், நம் முன்னாள் நிதியமைச்சர் ப.சி இதில் மிகத் தேர்ந்தவர். (இரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்பு கல்விக்கென்று ஒரு வரி விதித்தார்களே, அதை வைத்து எ ன்ன செய்தார்கள் என்று யாருக்காவதுத் தெரியுமா?
* பொறுப்பான குடிமகன்(ள்)கள் தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியோடு(மற்றும் இன்ன பிற வரிகள்) இக்கடனை அடைக்க தனியாக சிறிது நிதி கொடுக்கலாம். அப்படி கொடுப்பவர்களுக்கு அரசு சில சலுகைகள் கொடுக்கலாம்.
* நிறைய தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுஞ்செய்தி போட்டிகள் மற்றும் குறுஞ்செய்தி வாழ்த்து செய்திகள் சேவையை (????) செய்து வருகின்றன. அவை ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இந்த கடன் தீர்க்கும் நிதிக்கு கொடுக்கலாம்.
சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கபாலு பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேக்க வில்லையாமே?
நொந்தகோபால், சேலம்
இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சார்ந்த இந்த எம்.பிக்களும் பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) மற்றும் வேணுகோபால் (திமுக) ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையாம். நீங்களாவது இதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டீர்களே?
மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி என்று வைகோ குற்றம் சாற்றியுள்ளாரே?
ராமகிருஷ்ணன், கம்பம்
சில வருடங்களுக்கு முன்பு பா.ம.க வை உடைக்க அ.தி.மு.க முயற்சிப்பதாக பா.ம.க வினர் குற்றம் சாற்றினர். இப்போது என்ன ஆயிற்று? இதைத்தான் நமது தத்துவ(அரசியல்) மேதை கவுண்டமணி “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” எ ன்று சொல்லி இருக்கிறார். இதை கண்டுக் கொள்ளாதீர்கள்.
ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் தேர்தலில் போட்டியாமே?
விஜய், பெங்களூரு
தேர்தல் பிரச்சாரத்திற்காவது சரியான நேரத்தில் வண்டி கிளம்புமா?
யாருடன் கூட்டணி என்பதைப் பற்றி ஏப்ரல் 1ஆம் தேதி கார்த்திக் அறிவிக்கிறாராமே?
சரத், தூத்துக்குடி
நோ கமெண்ட்ஸ்/ஆன்சர்ஸ்
பாஜக மதவாத கட்சி அல்ல என்று சரத்குமார் கூறியுள்ளாரே!?
கணேசன், சென்னை
தேர்தல் சமயத்தில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நிகழ்வது சாதராணம். இருந்தாலும் சரத்குமாருக்கு இதற்காக சிறந்த கண்டுபிடிப்பிற்கான பரிசு வழங்கலாம்.
கருணாநிதியை ரம்பா சந்தித்து உள்ளார், அது குறித்து ஏதேனும் தகவல் தர முடியுமா?
மானாட மயிலாட பாகம் நான்கு பற்றி கலந்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவுடன் எந்நாளும் கூட்டு சேர மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று ராமதாஸ் சில வருடங்களுக்கு முன்பு கூறினார்?
அட அதை இன்னுமா நினைவு வைத்து இருக்கிறீர்கள்?
அதிமுகவில் மரியாதை கிடைக்கவில்லை என்பதால் திமுகவில் இணைகிறேன் என்று சொல்கிறாரே ராதாரவி?
ராதிகா, சென்னை.
எது எங்கே கிடைக்கும் என்று கூடவா அவருக்கு தெரியவில்லை? இது தெரிந்துக் கொள்வதற்கு அவருக்கு இவ்வளவு வருடங்கள் ஆயிற்றா?
வருண்காந்தி?
பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது!?
குறிப்பு:
கேள்வியும் கேள்வி கேட்டவர்களின் பெயரும் கற்பனையே!
நீங்கள் கூட கேள்விகள் கேட்கலாம். ஆனால் கண்டிப்பாக பதில்கள் வரும் என்று சொல்ல இயலாது.