Category Archives: அலசல்

பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பற்றித் தான் கூறுகிறார் விவேக். தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டு வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் விவேக்கிற்கு கடும் கோபம் இருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம். சாமி படத்தில் பாரதியார் புகைப்படத்தை சிறுவர்களிடம் காட்டி இவர் யாரென்று கேட்பார், அதற்கு அவர்களில் ஒருவன் “சந்தன கடத்தல் வீரப்பன்” என்று சொல்வான். இவர் இதை நகைச்சுவைக்காக செய்தாராம். பாரதியாரை இவர் அசிங்கப்படுத்த வில்லையா? என்னங்கையா நியாயம் இது? ஒரு வேளை நம்ம ஊர் காரங்களை நாம மட்டும் தான் அசிங்கப் படுத்தனும்னு நெனச்சி அந்த மாதிரி பண்ணிட்டாரு போல!

தமிழிஷில் ஓட்டு போட இங்கு க்ளிக்கவும்

தீவிரவாதிகளின் தாக்குதல்களும் சில கவலைக்குரிய விஷயங்களும்


மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் போராடி தமது இன்னுயிரை நீத்த நமது பாதுகாப்பு படையினருக்கும் காவலர்களுக்கும் வீர வணக்கங்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலால் அரசியல்வாதிகள் சண்டை போடுகிறார்களோ இல்லையோ ஆனால் தாங்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று பேச ஆரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்றுத் தோன்றுகிறது.

கவலைக்குரிய விஷயங்கள்:
எல்லா கமாண்டோக்களும் வருவதற்கு விமானம் இல்லாமல் அவர்கள் வரத் தாமதம். இதற்கு பிறகு அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் தனி கமாண்டோ படை அமைக்கப் படும் என்று அறிவித்து இருக்கிறது.

போலீஸ்காரர்களிடம் இருந்த குச்சியை (நன்றி புவனேஷ்@சுட்டபழம் ) வைத்து என்ன பண்ணுவார்கள் பாவம். மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவர்கள் தீவிரவாதிகளிடம் போட்ட சண்டையை பாருங்கள். லோக்கல் தாதாக்களிடம் கூட நம்மூர் போலீஸ்காரர்களை விட அதி நவீன ஆயுதங்கள் வைத்து இருப்பார்கள். எனவே காவலர்களுக்கு நவீன ஆயுதங்களை தர வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்பட குண்டுத் துளைக்காத ஆடையிலும் குறைகள் இருந்தன என்று வேறு சொல்கிறார்கள்.

இத்தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு 5 லட்சம் உதவித் தொகை ஆனால் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராக்கு 3 கோடி உதவித் தொகை(நன்றி இங்கிலிஷ்காரன்). தங்கம் வாங்கிக் கொடுத்தது முக்கியமா அல்லது பல நூறு உயிர்களை காத்தது முக்கியமா? அரசு இவ்வீரகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.

இத்தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்து கல்லாவை நிரப்ப அலைந்த மீடியாக்கள். பாதுகாப்பு படையினர் இவர்களிடம் கடுமையாக நடந்து இருக்க வேண்டும். அப்பகுதியில் யாரையும் அனுமதித்து இருக்க கூடாது.

அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவரிடம் தீவிர விசாரணை செய்த பின்னரே அனைவரையும் விடுவித்திருக்க வேண்டும். ஏன் மயக்க வாயுவை உபயோகிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

அதிரடி படையினர் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டனரோ அல்லது இத்தகைய நிலைமையை கையாள இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்றோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அரசு எல்லாவற்றயும் தீர பரிசீலித்து சரியான பாதையில் இனியாவது செல்ல வேண்டும். நாட்டு மக்கள் பயமில்லாமல் வாழ வழி செய்வது அரசின் கடமை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதம்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்களைப் பற்றியும் அதற்குப் பின் ஏற்பட்ட கேள்விகளைப் பற்றியும் ஒருப்பதிவு. இது லேட் தான், ஆனால் லேட்டஸ்டா என்றுத் தெரியாது 🙂

விஜயகாந்திற்கு அவர் கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் பிடித்து வைத்திருந்தனராம். துண்டு போட்டுவைத்து இருந்தனரா என்றுத் தெரியவில்லை.

அஜீத் மற்றும் விஜய் சந்த்திப்போது அவர்கள் கைகுலுக்க முயன்றப்போது அதை அங்கிருந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப் போட்டோ போட்டி போட்டுள்ளனர். இதைப்பார்த்து ராதாரவி ஆவேசமாகி “இது நட்சத்திர இரவு அல்ல, போய் உட்காருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த போட்டோகிராபர்களை என்னவென்றுச் சொல்வது? பாவம் அவர்களும் இந்தப் புகைப்படங்களைப்போட்டு நாலு காசு பார்க்க வேண்டாமா?

உண்ணாவிரத மேடையிலிருந்த நடிகைகளைப் பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதி நடிக/நடிகயைர்கள் சார்பாக நிதி திரட்டப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

இந்த நிதிக்கு ரஜினி மட்டுமே 10 லட்சம் அளித்தார். கமல் மற்றும் சிவக்குமார் ஆளுக்கு 5 லட்சம் கொடுத்தனர். லாரன்ஸ் 10 லட்சங்கள் நிதி திரட்டி அவருடையப் பணம் 2 லட்சங்களோடு 12 லட்சங்கள் கொடுத்துள்ளார். வழக்கம்போல சிலர் ரஜினி பேசியதை வைத்து அறிவி ஜீவித்தனமாக கேள்வி கேட்டுவிட்டனர். அவர் கொடுத்த 10 லட்சங்களைப் பற்றி மறந்துவிட்டனர். ஆனால் அவர் நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே என்றுக் கேட்பவர்கள் இப்பொழுது கொடுத்த பணத்தை வசதியாக மறந்துவிடுவார்கள். நதிநீர் இணைப்புப் பற்றி இன்னும் எந்த செயலும் ஆரம்பிக்காதப்போது அவர் எதற்குப் பணம் இப்போதே கொடுக்க வேண்டுமென்றுப் புரியவில்லை. அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதற்கும் இவர்கள் ஏதேனும் ஒரு அர்த்தம் கற்பிப்பர். நல்லவேளை ரஜினியைப் போன்று கமல், ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.

மனிதச்சங்கிலி போராட்டமும் தமிழனின் தகுதியும்


சென்னையில் நடைபெறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தை பற்றி  புரட்சித் தமிழன் சத்யராஜ் வழக்கம் போல ஆவேசமாக பேசியிருப்பது என்னவென்றால்:

1) சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

2) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இவர் சம்பந்தப்பட்ட துறை நடத்திய ஊர்வலத்தில் அவரது வீட்டில் முக்கியமான நிகழ்ச்சி இருந்ததால் இவரால் போக முடிய வில்லையாம். ஆனால் முதல்வர் அழைத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத எவருக்கும் தமிழகத்தில் இருக்கவே தகுதி இல்லையாம். ஹிஹி, முதல் விஷயத்தையும் இரண்டாம் விஷயத்தையும் படித்து விட்டு இப்படி யாரும் விதண்டா வாதம் செய்யக்கூடாது. அவருடைய வீட்டு பிரச்சினை தான் அவருக்கு முதலில், மற்றவை எல்லாம் அதற்குப்பின்தான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருக்கக் கூடாது.

புரட்சித் தமிழன் வீட்டில் மனிதச் சங்கிலி நடத்தும் அன்று எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் நடக்காது என்றும் நம்புவோமாக. அதே போல் தமிழகத்தில் இருக்க விருப்பப்படுபவர்கள் அனைவரும் அந்நாளன்று வீட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி இருந்தால் அவற்றை வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள்..

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும் கலந்துக் கொள்ளாதவர்கள் தமிழத்தில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

சத்தியராஜ் ஒரு புரட்சித்தமிழன், எனவே அவர் ராமேஸ்வரம் போராட்டத்தில் அவரது வீட்டு நிகழ்ச்சியினால் கலந்துக் கொள்ள முடியாததால் எந்த பிரச்சினையயும் இல்லை. அதைப் பற்றி எந்த கருத்து கந்தசாமியும் கருத்தும் கூறவில்லை. இதே நிலைமையில் மற்றவர்கள் இருந்திருந்து அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சத்யராஜ் கலந்துக் கொண்டிருந்தால் அன்றைக்கு மேடை அமர்க்களப்பட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை விட, யாரை குறிவைத்துத் தாக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மின்சார சமாச்சாரம்


தமிழக அரசு(மின் துறை) சில நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் சம்பந்தமாக சில விஷயங்களை அறிவித்தது (அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு, என்னுடைய பதிவு எண்ணிக்கையை ++ செய்யவே இப்பதிவு):

1)தனியார் நடத்தும் விழாக்களுக்கு(ஆலயத் திருவிழாக்கள் நீங்கலாக) ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இது கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இருக்கலாம். இதை எல்லா கட்சி கூட்டங்களுக்கும் கடுமையாக அமுல்படுத்தவேண்டும். (இதை  தே மு தி க பொதுக்கூட்டம் அறிவித்த போதே அமுல்படுத்தி இருந்தால் நிறைய மின்சாரம் சேமித்து இருக்கலாமே, ஹிஹி)

2) நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாம்.

குறைந்தபட்சம் 20 மணி நேரம் என்று சொல்லி இருக்கிறார்கள் (நல்ல வேலை உஷாராக அதிகபட்சம் என்று சொல்ல வில்லை), அதை அமுல்படுத்தியும் உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் (??)

3) சில நிறுவனங்களுக்கிற்கு, தொழிற்சாலைகளிற்கு, அலுவலகங்களிற்கு மின்வெட்டிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) வீட்டு இணைப்புகளில் அதிகமாக மின்சாரம் உபயோகிப்போருக்கு 50% அதிகமாக கட்டணம் விதிக்கப்படும்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைப் பார்த்து இவ்வுத்தரவை ரத்து செய்து விட்டார்கள்.

இதை பற்றி, விஜயகாந்த் என்ன சொல்கிறார்? இந்த மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அவரிடம்  யோசனை இருக்கிறதாம். அதை சொன்னால் கருணாநிதி அதை செயற்படுத்தி விடுவார் என்பதால் அதை இப்போது சொல்ல மாட்டாராம்.  அடப்பாவிகளா, உங்கள் யோசனையை யார் செயல்படுத்தினால் என்ன, மக்கள் பயன்பெறுவார்களே, உங்களுக்கும்(விஜயகாந்திற்கு) பெயர் கிடைக்குமே? (நன்றி சிம்பிள் சுந்தர்!)

சரி மக்களே, அதை எல்லாம் விட்டுடுவோம். தமிழத்தில் தலைவிரித்தாடும் இந்த மின்வெட்டு பிரச்னைக்கு என்ன காரணம்(ங்கள்) என்பதை யாரவது தெரியப்படுத்தலாமே?

இளையவர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் – இந்தியா முன்னிலை


புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே 🙂 ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.

காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க், நகரத்தில் 2000 ம்ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது போட்டிகள் 2004 ம்ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பதக்கம் வென்ற சில இந்தியர்கள்: திரிபாதி கிருஷன் நந்து, குலே  சாரதா,  பூனம் ராணி, அர்ஜுன் குமார் இன்னும் பலர்.

இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்.

சரி, பதக்கங்கள் பட்டியலை பார்ப்போமா?

Medal Standings Gold Silver Bronze Total
1 India 33 26 17 76
2 Australia 24 19 22 65
3 England 18 9 14 41
4 South Africa 7 14 9 30
5 Canada 6 10 10 26

இதை பற்றி மேலும் அறிய இத்தளத்தை பாருங்கள்.

மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?


ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?

காதலில் விழுந்தேன் குடும்ப பிரச்சினை


காதலில் விழுந்தேன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சி மற்றும் சிலர் இப்படம் வெளியாவதை விரும்பவில்லையென்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரமிது.

அந்த படம் எப்படி இருக்கிறதென்றுத் தெரியவில்லை. ஆனால் சன் நிறுவனம் அதனுடைய எல்லா அலைவரிசைகளிலும் இப்படத்திற்கு 5 நிமிடங்களுக்கொரு தடவை விளம்பரம் செய்து வருகிறது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இது அளவுக்கு மீறிய விளம்பரமாகவே தோன்றுகிறது.

இப்படத்திற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாகவும் இப்படம் சில இடங்களில் திரையிடப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் வேறு செய்திகள் வெளியாகின்றன( கவுண்டமணி பாஷையில் அடங்கொண்ணியா!).

இவர்கள் குடும்ப விவகாரத்தை விட்டால் தமிழகத்தின் பிரச்சினையாக்கி விடுவார்கள் போல இருக்கிறது. இவர்கள் ஆட்சியிலிருந்தால் இவர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்றும் இவர்களுக்கு பிடிக்காதவர்கள் செய்வதற்கெல்லாம் எதிராக செயல்படுவதும் சரியல்ல. சன் நிர்வாகமோ தான் நினைத்தை செய்தே தீருவேன் மற்றும் ஏகாதிபத்திய நிறுவனமாக தான் திகழ வேண்டுமென்றும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே சன் நிறுவனம் நகைச்சுவைக்கென்றே தனி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து அதை சன் டீடிஎச்சில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறது (வடிவேல் பாஷையில் என்ன ஒரு வில்லத்தனம்!).

ஒரு நிறுவனம் எல்லாத்துறைகளிலும் நன்றாக வளரட்டும். ஆனால் அவ்வளர்ச்சியை வைத்துக் கொண்டு என் வழியாகத்தான் எல்லாமே செய்ய வேண்டுமென்று சொல்வது நியாயமல்ல. டாடா நிறுவனம் எல்லாத்துறைகளிலும் கால் பதித்துள்ளது. அதற்கு உலகளாவிய அளவில் நல்லப் பெயரும் உள்ளது. ஆனால் டாடா நிறுவனம் மேல் இப்படி ஒரு ஏகாதிபத்திய குற்றச்சாட்டு இல்லை. இப்பேர்பட்ட டாடா நிறுவனத்தின் டீடிஎச்க்கு சிலர் தொந்தரவுகள் கொடுத்தனர் என்றும் செய்தி எப்போதோ வந்தது. ஆனால் அப்போது ஒரே குடும்பமாக இருந்ததால் இப்பிரச்சினை பிரச்சினையாகவே மாறவில்லை. இனிமேல் சில குடும்பங்கள்‌ நினைக்கும் படம் தான் தமிழகத்தில் வெளியாக முடியும் மற்றும் சில குடும்பங்கள் வெளியிடும் செய்திகளைத்தான் தமிழக மக்கள் நம்ப வேண்டும் என்ற நிலை உருவானால் கூட ஆச்சரியமில்லை.

நமக்கு விடுமுறை, ஆனால் அவர்களுக்கு?


சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்காக அலுவலகத்தில் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறை நாளென்பதால் மதிய உணவிற்காக வெளியே செல்ல நேரிட்டது. அப்படி செல்லும்போது ஒரு விடயத்தை கவனித்தேன். நமக்கு தான் விடுமுறையேத் தவிர பெரும்பாலனவ  ர்களுக்கு அந்நாள் வேலை நாளே. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அவர்களுக்கு இம்மாதிரி விடுமுறை நாட்களில் தானே வியாபாரம் நிறைய செய்ய முடியும்.

இதே மாதிரி மே 1 (உழைப்பாளர் தினம்) அன்று கூட இம்மாதிரி ஆட்களுக்கு விடுமுறை கிடையாது. நிறைய தடவை நான் யோசிப்பது என்னவென்றால் உழைப்பாளர் தினம் அன்று இம்மாதிரி உழைப்பவர்களுக்குத் தானே விடுமுறை அளிக்க வேண்டும். நமக்கு எதற்கு என்று (என்னை மாதிரி கணினி சம்பந்தப் பட்ட வேலை செய்பவர்களை சொல்கிறேன், இது என்னுடைய கருத்து).

தீபாவளி, பொங்கல் மற்றும் இன்ன பிற விழா நாட்களில் தங்களது குடும்பத்துடன் அந்நாளை செலவழிக்காமல் தங்கள் வேலை நிமித்தமாக உழைப்பவர்கள் எத்தனை பேர். அவர்களது குழந்தைகள் அப்பா(அல்லது அம்மாவை) பார்க்காமல் எப்படி ஏங்கி போவர்? ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் நிலைமையோ இதற்கும் மேல். தங்கள் சொந்த ஊருக்கு வந்து தங்கள் குடும்பத்தை பார்க்கும் தினம்தான் அவர்களுக்கு திருவிழா.

அதுவும் இம்மாதிரி விழா நாட்களில் ஒயின் ஷாப்பில் வேலை செய்யும் நபர்களின் நிலைமை சொல்ல வேண்டுமா? அங்கு வரும் குடி மகன்களின் இம்சை வேறு தாங்க முடியாது. விழா காலம் என்றாலே என்னை போன்று வெளியூரில் தங்கி இருப்பவர்கள் பேருந்து பயணத்தை தான் நம்பி இருக்கிறோம். விழா காலங்களில் பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதே இல்லை. அப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் படும் பாடு இருக்கே. விழா நாட்களிலும் அவர்கள் அவர்களது கடமையை செய்தே ஆக வேண்டும். (அவர்கள் அந்நாட்களில் அதிக பணம் பெறலாம், இருந்தாலும்?). இப்பட்டியலில் மருத்துவர்கள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள், இன்னும் பலர் உள்ளனர்.

நம்மை போன்றவர்களுக்காக தங்களுடைய குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை விட்டு விட்டு வேலையை/கடமையை செய்யும் அவர்களுக்கு இவ்விடுகை ஒரு சமர்ப்பணம்.

யாரிந்த சூஸி ஆர்மன் (Suze Orman)?


சில நாட்களுக்கு முன்பாக சிஎன்பிசி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பொது ஒரு சுவராஸ்யமான நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அந்நிகழ்ச்சியில்  ஆர்மன் என்னும் பெண்மணி தொலைபேசியில் நேயர்களுக்கு நிதி ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார். நேயர்கள் தங்களது நிதி நிலைமை (வருமானம், கடன், முதலீடு, சேமிப்பு) இவற்றை சொல்லி அவரிடம் ஆலோசனை பெற்றனர். உதாரணத்திற்கு ஒருவர் எதாவது பொருளை (எல்.சி.டி டிவி) விருப்பப்படுகிறார் என்றால் அவர் தனது சம்பளம், கடன் இவற்றை எல்லாம் சொல்லி தான் அந்த பொருள் வாங்கலாமா என்று கேட்பார். அதற்கு சூஸி அந்நேயருடைய நிதி நிலைமையை ஆராய்ந்து அவர் அப்பொருளை வாங்கலாமா வேண்டாமா என்று சொல்லுவார் (பாதி நேரம் கண்டபடி அந்நேயரை திட்டி விடுவார், உனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது, இந்நேரத்தில் உனக்கு இந்தப் பொருள் தேவையா என்று).

ஏனிந்த நிகழ்ச்சியை போன்று இன்னும் எந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வில்லை என்பதே என் ஆச்சரியம்.

எனக்கு இந்நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக பட்டதால் யார் இந்த பெண்மணி என்று விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தப் போது கிடைத்தவை இவை.

சூஸி ஆர்மன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிதி ஆலோசகர். இவர் CNBC தொலைக்காட்சியில் “சுஸ் ஆர்மன் ஷோ” என்கின்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவர் எழுதிய ஆறு நூட்கள் நியூயார்க் டைம்ஸ் இதழால் பெஸ்ட் செல்லர்ஸ் என்ற சிறப்பை பெற்று இருக்கின்றன. இந்த ஆறு நூட்களை வைத்து இவர் PBS (Public Broadcasting Services) ஆறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இவருடைய PBS நிகழ்ச்சிகளுக்காக இரண்டு முறை எம்மி அவார்ட் வாங்கி உள்ளார். 2008 ல் டைம்ஸ் இதழால் இவர் மிகுந்த செல்வாக்கு உள்ள நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவர் மேல சில புகார்களும் உள்ளன. போர்ப்ஸ் இதழ் இவர் வழங்கும் ஆலோசனைகள் மிக எளிமையாக உள்ளது மற்றும் இவரது சில சான்றிதழ்களை தவறாக காட்டி உள்ளார் என்றும் கூறி உள்ளது. உதாரணத்திற்கு இவரிடம் இருந்த காலவதியான உரிமத்தையும், அவை இன்னும் செல்லக் கூடியது என்று சொல்லி உள்ளாராம். அதே போன்று இவருடைய கோப்புகளில் இவருக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுடன் 18 வருட அனுபவம் உள்ளது என்று கூறி உள்ளார். ஆனால் இவருக்கு 7 வருடங்கள் அனுபவம் தான் உள்ளது என்றும் கூறுகின்றனர். ஒரு செய்தித் தாள் நிறுவனம் சூஸி ஆர்மன் சம்பந்தப் பட்டவரிடம் இது குறித்து தொடர்பு கொண்ட போது, அப்புத்தகத்தை பதித்த நிறுவனம் அத்தவறான தகவலை தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

பின்குறிப்பு:

என்னால் முடிந்த வரை தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பிழை இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும்.

பதிவு மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும் 🙂